Wednesday, June 19, 2013

ஆழ்வார் - ஆள்வார்



ஆழ்வார் - ஆள்வார்


சமண தமிழ் இலக்கியங்களில் பயின்றுவரும் சமண சொற்றொடர்களை (பரிபாஷைகளை) ஆராய்வதென்பது எனக்கு என்றுமே ஆர்வத்தைத் தூண்டும் செயலாகும். அருகன் என்ற சொல்லாகட்டும், பட்டாரகன் என்ற சொல்லாகட்டும் பிண்டியர் என்ற சொல்லாகட்டும், அச்சொற்களின் மூலத்தையாராய்ந்து அதன் முழு முதற் பொருளையும் பருகுவதென்பது தேனில் ஊறிய பலா தான்!

அருகன், பட்டாரகன் போன்ற சொற்களின் ஆழத்தைப் பிறகு பார்க்கலாம். அதற்கும் முன்னே “சமண பரிபாஷைகளில்” மிக முக்கியமான ஒரு சொல்லை முதலில் ஆராய்வோம்.

ஆழ்வார்

சமண இறைவர்களை (இறைவன் என்பது முனிவர்களைக் குறிக்கப் பயன்படும் சமண பரிபாஷை) அருகன் என்ற திருபெயரைக் கொண்டு அழைக்கப்படுவர் என்பது, குறைந்தபட்ச தமிழ் ஞானம் உள்ளவர்களும் அறிந்ததே. ஆயின், சமண இறைவர்களை “நாயனார்” என்றும் “ஆழ்வார்” என்றும், கடவுள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ”கடவுள்”  என்பதற்கு முற்றும் துறந்த முனிவர் என்றே பொருள். சமண இலக்கியங்களுக்கு உரையெழுதும் போது இவற்றின் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. சீவகசிந்தாமணிக்கு முதன்முதல் ஒரு உரையை நச்சினார்க்கினியர் என்ற சைவப் பெருந்தகை உரையெழுதி அதை சமண சமய புலவர்களிடம் ஒப்புதலுக்காக காட்டினார். ஆனால், அவர் உரை சமண சமயபரமாக இல்லை என்று ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பின்னர், சமண சமய ஆசிரியர்களிடம், பயிற்சிப் பெற்று மறுமுறை உரையெழுதி சமணர்களின் அனுமதிப் பெற்று வெளியிட்டார் என்ற ஒரு கருதுகோளும் உண்டு. 
இதனால், இன்றைய வலைஞர்களுக்கு யான் எழுதுவது புதுச் செய்தியாகவும் தோன்றலாம் அல்லது ஏதோ கதைவிடுவதாகவும் தோன்றலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தேவர் வாக்கிற்கிணங்க ஆழ்வார் என்ற திருபெயர் எவ்வாறு அருகனுக்கு வழங்கி வந்தது என்பதை இக்கட்டுரையில் விளக்க முயலுகிறேன். சிலருக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு பாதையில் சென்று செம்பொருள் காணுதல் வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரை ஒரு ஆய்வுத் திறக்கு அமைய வழிகோலும் என்பது என் எண்ணம். 

ஆள்வாரா அல்லது ஆழ்வாரா?

ஆள்வார் மற்றும் ஆழ்வார் என்ற சொற்களுக்கு வேர்ச் சொல் வேறு, வேறு மூலத்தைக் கொண்டதாகும். ஆள்வார் என்பதற்கு ஆள் என்பது வேர்ச் சொல். அதுபோல் ஆழ்வார் என்பதற்கு ஆழ் என்பது வேர்ச் சொல். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆள்வார் என்பதே ஆழ்வார் என்றுத் திரிந்தது என்று நினைத்திருந்தேன். நினைத்து அவ்வாறே சில மின்குழுமங்களில் எழுதியும் இருக்கிறேன். அதற்கு யான் ஆதரமாகக் கருதியது, ஒரு எளிய சொல். அச்சொல் எவ்வாறு என்னை திசைத்திருப்பியது என்றால்?

பழம் என்பதை ப+ழ+ம் என்று பலுக்கவேண்டும். ஆனால், நம்மில் பலரும் பேச்சு வழக்கில் பளம் அல்லது பலம் என்று உச்சரிக்கிறோம். இங்கு “ழ” கரம் “ள” கரமாகத் திரியும். ஆழ் என்பது ஆள் என்றுத் திரிந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இவ்வாறான குழப்பத்திற்கு யான் மட்டும் ஆளாகவில்லை; நிறைய அறிஞர் பெருமக்களும் ஆளாகியிருக்கிறார்கள்.

குறிப்பாக திரு.எஸ். பழனியப்பன் அவர்களின் இந்த கட்டுரையைப் படிக்கவும்.

âlvàr or Nàyanàr: The Role of Sound Variation, Hypercorrection and Folk Etymology in Interpreting the Nature of Vaiùõava Saint-Poets
                                                                                                                        S. Palaniappan

இவரின் கருத்தை இன்றைய வைணவர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!

ஆழ்+பொருள் என்ன?

ஆழ் என்பதற்கு Sink; plunge; dive; immerse என்று கழக அகராதி பொருளுரைக்கிறது.

ஆழ்ந்தாராய்தல் think deeply; Cogitate என்றும் பொருளுரைக்கும் கழக அகராதி, “ஆழ்வார்” என்பதற்கு Saint; Lord என்று மிக சரியாகப் பொருளுரைக்கிறது. 

தவிரவும், நடைமுறையில் பேசப்படும் சொல்லாட்சிகளான, “என்ன ஆழ்ந்த யோசனையா?”, “ என்ன ரொம்ப ஆழமா மூழ்கிட்ட போல” என்பதைக் கவனிக்கும் போது ஆழ் என்ற வேரின் பொருள் புரிகிறது.

ஆள்+பொருள் என்ன?

ஆள் என்பதற்கு Man; warrior; devotee; servant; person என்றும் ஆள்தல் என்பதற்கு rule; use; maintain என்றும் மிக சரியாகவே கழக அகராதிப் பொருளுரைக்கிறது.

”நீ பெரிய ஆளுப்பா” என்றும் “அவரு ஆளப் பிறந்தவரு” என்றும் பேச்சு வழக்கினில் வரும் சொல்லாட்சிகளைக் கவனிக்கவும்.

அருகன் ஆழ்வாரா?

ஆழ்வார் என்ற பெயர் அருகனுக்குப் பொருந்துமா? என்றால்.. பொருந்தும்! எப்படியெனில், அருகர் சிலைகள் ஆழ்ந்த தியானக் கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தியானத்தில் ஆழ்ந்திருப்பதால் “ஆர்” விகுதி சேர்த்து “ஆழ்வார்” என்று அழைக்கப்பட்டார். இவர் கோலத்தைப் பார்த்து,  ”தன்னில் ஆழ்ந்துக் கொண்டிருப்பவரை”க் குறிக்க ஆழ்வார் என்ற பிரயோகம் பிறரால் குறிக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தை பொருத்தவரை கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் அருகர் சிலைகள் மலைகளில் வடிக்கப்பட்டன என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, தொல்லியல் அறிஞர் திரு. ஏகாம்பரநாதன் அவர்கள் குறித்திருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இருந்து, (கழுகுமலை, திருமலை) முதன் முதல் அருகரைக் குறிக்க ஆழ்வார் பயன்படுத்தப் பட்டிருப்பதுத் தெற்றெனத் தெரியும். 




 (படம் - கழுகுமலை. நன்றி - http://saravana-saraphoto.blogspot.in/2013/06/38.html )

அருகன் உருவங்களையும், சிலைகளையும் “தன்னில் ஆழ்வதாக” காட்டப்படவேண்டும் என்பது சிற்ப சாஸ்திரம். அவ்வாறே, தமிழகத்தில் காணும் அருகர்கள் சிலைகளும், உருவங்களும் காணப்படுவதும் இதை உறுதி செய்யும்.

கல்வெட்டுச் சான்றுகள்

·          1. திருநறுங்கொண்டைத் திருத்தல வரலாறுஎன்ற நூலில், புலவர் மணி. மு.சண்முகம்பிள்ளைதிருநறுங்கொண்டை அப்பாண்டைநாதரின் திருக்கோயிலை மேலிற்பள்ளி (மேல்நிலைப்பள்ளி) என்றும், சந்திரநாதர் திருக்கோயிலைக் கீழைப்பாளிஎன்றும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு பள்ளிகளும் தனித் தனியாக மனனர் முதலியோர் நிபந்தம் வைத்த செய்திகளும் இரண்டிற்கும் சேர்ந்து நிபந்தம் விட்ட செய்திகளும் சாசனங்களில் காணப்படுகின்றன. ஸ்ரீசந்திரநாதர்பாழியிலாழ்வார்என்றும் அப்பாண்டைநாதர் பள்ளியிலாழ்வார்என்றும் சாசனங்களில் குறிக்கப்படுகிறார்கள்.
·         a. திருநறுங்கொண்டைக்கீழைப்பள்ளியாழ்வார்..... (S.I.I., Vol,VII, 1016)
·         b. திருநறுங்கொண்டைத் தேவர் அப்பர்க்கும் பாழியிலாழ்வார்க்கும் திருவமுர்துபடிக்கு - (317 of 1939-40)
·         2. ஸ்ரீஅரைமலை ஆழ்வார்க்கு நித்தம் அபிஷேகத்துக்கு (S.II Vol.5.No.361)
·         3. ஸ்ரீதிருநெற்சுறத்து அரைமலை ஆழ்வார்க்கு திருப்பணி செய்கிற பட்டன் சுந்தரனான (S.II.Vol.5.No.357)
·         4. சித்தாமூர்க் கல்வெட்டு “சிற்றாமூர் திருவூராம் பள்ளியாழ்வார்” என்றும்..
·         வீடூர் கல்வெட்டு “பெரும்பள்ளி ஆழ்வார்” என்றும்..

 தமிழ்ச் சமண இலக்கியங்களிலும் அருகனுக்கு ஆழ்வார் என்ற திருநாமம் பயிலப்பட்டு வந்திருக்கிறது. திருநறுங்கொண்டை மாலை பதிகம், பத்தும் பதிகம் என்ற தொகுப்பு நூல், அப்பாண்டைநாதர் உலா போன்ற இலக்கியங்களிலும் ஆழ்வார் என்ற சொல்லாட்சிப் பயின்று வருகிறது.

முடிபாக, ஆழ்வார், ஆள்வார் என்பது வேறு, வேறு வேர்களைக் கொண்ட சொற்கள் என்பதும் Mr.Friedhelm Hardy அவர்களின் கூற்றுப்படி ஆழ்வார் என்பது சமண இறைவர்களை முதலில் குறித்துp பயன்படுத்தப்பட்டது. சமணர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டுகளுக்கு பிறகு வேறு சமயங்களுக்கு மாறிய வரலாற்றை அறிஞர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதில் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களும் ஒருவர். சமண சமயத்தவர்கள் அருகிய காலத்தில் மலைக்குன்றுகளில் இருந்த குகைவாசலகள் பின்னாளில் பிற சமயக் கோயில்களாக மாறியவுடன், ஆழ்வார் என்ற பெயர் பிறரும் பயன்படுத்தத் தலைப்பட்டனர். 

மேலும், இலக்கியத் தரவுகளைவிட கல்வெட்டுத் தரவுகள் முதன்மைச் சான்றுகளாகக் கருதப்படுவதாலும், ஆழ்வார் என்ற பதம் அருகர்களுக்குப் பயன்பட்டு, பின் மற்ற சமயத்தார்களும் பயன்படுத்தப் போந்தார்கள் என்பதும் ஈண்டு பெறப்படும்.


இரா.பானுகுமார்,
சென்னை

5 comments:

Adhiraj said...

வணக்கம் அய்யா...ஜய ஜினேந்திரம்
நல்ல சிறப்பான அலசல்...இதில் ஒரு சிறு சந்தேகம் ஆனால் அது பதிவுக்கு அப்பாற்பட்டது ....சந்தேகம் 1.நச்சினார்க்கினியார் மேல்சித்தாமூர் மடத்தில் ஜைன அறம் கற்றதாக தமிழ்தாத்தா உ.வே.சா அவர்களின் சுயசரிதையிலும் மதிப்பிற்க்குரிய பேரா.ஸ்ரீசந்திரன் அவர்கள் தன்னுடைய சீவகசிந்தாமணி ஓர் ஒப்பற்ற காப்பியம் என்ற புத்தகத்திலும் குறிப்பிடுகின்றனர் தாங்கள் ஜைன மடத்தை குறிப்பிடாமல் ஜைன அறிஞர்களிடம் கற்றதாக குறிப்பிட்டுள்ளீர்கள்?
சந்தேகம் 2:

ஆழ்வார் குறித்து விளக்கம் அளிக்கையிலே எனக்கு திருநூற்றந்தாதி எழுதிய அவிரோதிஆழ்வார் தான் நினைவிற்க்கு வந்தார் இந்த இடத்தில் அவிரோதி ஆழ்வார் என்ற ஜைன சான்றோரின் பெயர் தங்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும் அல்லவா அதை தவிர்த்தது ஏனோ?

கேள்விகள் நான் ஆர்வகோளாறு என உணர்த்தும் அறிவிற் சிறந்த நீங்கள் என் பிழை பொருப்பீர்கள் என்ற உரிமையினால் சந்தேகம் கேட்டேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன் ஆதிராஜ்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிறப்பான பதிவு இரா.பா

சமணத் திருவெம்பாவை எழுதிய அவிரோதி ஆழ்வாரை எப்படி மறந்தீர்கள்?:)
"சிற்றாமூர் பள்ளியாழ்வார்" இன்றே அறிந்தேன்; மிக்க நன்றி!
-----

"ஆழ்வார்"
= ஆழ்பவர்கள்/ நம்மையும் ஆழ்த்துபவர்கள்

யார் வேண்டுமானாலும் ஆழலாம்!
அன்பிலே ஆழலாம்;
இறைப் பண்பிலே ஆழலாம்!
ஆழ்பவர் எவரும் ஆழ்வாரே!

ஆழ்வார் = சமயச் சொல் அன்று; தமிழ்ச் சொல்!
அது தமிழ்ச் சமயங்கள் அனைத்துக்குமே பொதுவானது!

என்ன..., கால கட்டத்தில், ஒரு ஆளுமை பரவி நிலைக்கும் போது,
தமிழுக்குப் பொதுவான சொல்லு, ஒன்றுக்கு மட்டும் விதப்பாகத் தங்கி விடுகிறது, பொதுப் புழக்கத்திலே!

அதையே, ஒரு சாரார் பேசிப் பேசிப் பொதுவில் முன்னெடுக்க...
அந்தச் சொல், அமைந்து போகிறது; அப்படி ஆனது தான் போலும் வைணவத்தில் "ஆழ்வார்கள்"!

"பெருமாள்" என்ற சொல் கூட, அப்படி அமைந்தது தானே!
"திருமால், மாயோன்" என்பது தானே தொல் தமிழ் மரபு;

பெருமாள் = அரசர்களையும் குறித்த சொல்;
ஆனால், ஒரு சாரார் "பரிபாஷ"->"பொதுபாஷை" ஆகும் போது, இச்சொற்கள் தங்கி விடுகின்றன!

"இறைவன்/ கடவுள்" என்ற பொதுப் பெயர்கள் மட்டும்,
இன்னும் பொதுப் பெயர்களாகவே தங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி;
----

எதுவாயினும், ஆழ்பவர் = ஆழ்வார்!
*அருகனில் ஆழ்ந்தாலும் ஆழ்வார்;
*முருகனில் ஆழ்ந்தாலும் ஆழ்வார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சொல்ல மறந்துட்டேனே...
அரசிளம் குமரிக்கும் = ஆழ்வார் எனும் சொல் உண்டு:)

"குந்தவை ஆழ்வார் விண்ணகரம்" என்ற கல்வெட்டுக்கள்!
"ஆழ்வார்" பராந்தகன் குந்தவை வல்லவரையர் வந்தியத்தேவன் மாதேவியார்...

இதே போல்,
சாக்கிய நாயனார் (சமண/பெளத்தம்), அழகிய மணவாளப் பிள்ளைப்பெருமாள் நாயனார் (வைணவம்)... என்பதும் உண்டு!
-----

//சமண சமயத்தவர்கள் அருகிய காலத்தில் மலைக்குன்றுகளில் இருந்த குகைவாசலகள் பின்னாளில் பிற சமயக் கோயில்களாக மாறி//

உண்மையே!
இன்றும் திருப்பரங்குன்ற மலையில், சமணச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம்!
பரங்குன்றத்தில், அருகனும் உண்டு! முருகனும் உண்டு!

சங்கப் பாடல்களிலேயே, பரங்குன்றம் பயின்று வரும்!
* சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
* அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை...

தன் ஆருயிர் நண்பன் = நல்-அந்துவனார்;
அவனை வச்சிப் பாடுவாரு = மருதன் இள நாகனார்;
இருவரும் வெவ்வேறு சமயம்; But thickest thozhans:)

நண்பனும் இன்னோரு தமிழ்க் கவிஞன் -ன்னு பொறாமை காட்டாமல், மிக்க அன்புப் பாடல் அது;
அரசன் பேரைச் சொல்லுவாக; ஆனா சக கவிஞன் பேரை?
கவிஞன்-நண்பனின் பேரைப், பாட்டில் வெளிப்படையாப் பாராட்டும் குணம்!
= அன்று இருந்தது; இன்று???
------

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மதுரைக் காஞ்சி என்னும் கடைச் சங்க நூல், பரங்குன்றத்தில் சமணப் பள்ளியும் சேர்த்தே காட்டும்;

பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற..

* பின்னாளில் தான், சமய-அரசியல், இலக்கிய உலகிலும் புகுந்து..
* ஒன்றையே பரக்கப் பேசிப் பேசி..
* அது மட்டுமே தமிழ்/ தமிழ்க் கடவுள் என்பது போல் காட்டத் தலைப்பட்டு விட்டார்கள், "மதம் சார்ந்த" தமிழ் அறிஞர்கள்;
* பெரும்பான்மைப் பெருமைபேசும் குரல்களால், சிறுபான்மை மரபின் குரல் அமுங்கியே போனது:(
--------

இந்தப் பதிவைப் படித்த பிறகு, அப்பண்டை நாதர் உலா போன்ற சமணத் தமிழ்க் கவிதைகளை இன்னும் கூர்ந்து படிக்கும் ஆசையே துளிர் விடுகிறது;
முன்பு எப்பவோ இட்ட அருக வணக்கம் = http://dosa365.wordpress.com/2012/09/05/28/

சமணத் தமிழிலக்கியப் பேச்சு ரொம்பவே கொறைஞ்சு போயிருச்சி:(

சமணத்தமிழ்க் கவிதைகளும் ஒரு வட்டத்துக்குள்ளேயே முடங்கி விடாமல், இன்னும் பரவணும்!

மேன்மை கொள் சமணத் தமிழ்
ஓங்குக இலக்கிய உலக மெல்லாம்!

Venkatasubramanian said...

எனக்கு மிக நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. சமணர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி வைதீகத்துக்கு திரும்புகையில், பல விஷயங்களை மாற்றாமல் கொண்டு வந்திருக்கிறார்கள்.

முதலாவது இந்த ஜாதி விஷயம். அது வரை ஜாதி தொழில் சம்பந்தப் பட்டது. சமணமும் பௌத்தமும் முதலில் ஜாதியை சமய ரீதியில் கொண்டு சென்றன.

இரண்டாவது அவர்களின் சைவ வெறுப்பு. அதனாலேயே அவர்கள் வைணவம் என்ற பிரிவை உருவாக்கி விட்டனர். சைவத்தின் பசு பதி பாசம் போன்றே ஆழ்வார்களின் பாடல்களிலும் இந்த முக்கோண விஷயம் எதிரொலிப்பதாக மலேஷியாவின் லோகா தெரிவிக்கிறார்.

குஜராத்திலும் கூட வைணவம் அப்படியே சமணத்தை விழுங்கிய பின்னரே வந்திருக்கிறது. இன்றும் அமணர்கள் திருப்பதி முதலான கோவில்களுக்கு செல்வார்கள்.

சைவத்தின் பெருந்தன்மையான விஷயங்கள் வைணவத்தில் இல்லாமல் இருப்பதும், வைணவம் என்றுமே ஒரு தீவிர பிரிவாக இருப்பதும் கூட சமணத்தின் இறக்குமதியோ என்று படுகிறது.